தொடரும் தோழர்கள்

Sunday, February 18, 2018

குறும்பன்

நூல்: குறும்பன்
ஆசிரியர்: கஃபூர் குல்யாம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
மொத்த பக்கங்கள்: 256

அன்றைய ஒருங்கிணைந்த ருஷ்யாவின் ஒருபகுதியாக இருந்த  இன்றைய   உஸ்பகிஸ்தானியக் கவிஞர் கஃபூர் குல்யாமின் நாவல் குறும்பன். பல்வேறு விருதுகளை தன் வாழ்நாளில் பெற்றவர். ஆசிரியராகப் பணிபுரிந்த சிறந்த எழத்தாளர்.

14 வயதே நிரம்பிய குறும்புக்கார  சிறுவனின் கதைதான் குறும்பன். சிறுவர்கள்  கூட்டஞ்சோறு (புலவு சாதம்) சமைப்பதற்காக ஆளுக்கொரு பொருளை கொண்டுவருவது என தீர்மானிக்கப்பட்டு குறும்பன் தன் பங்காக மாமிசக் கொழுப்பை தன் வீட்டில் இருந்து எடுத்து வந்து அம்மாவிடம் மாட்டிக்கொண்டு அதிலிருந்து தப்பிப்பதற்காக வீட்டைவிட்டே வெளியேறி அவனது அத்தை வீட்டிற்கு சென்று அங்கிருந்தும் வெளியே சென்று ஊரெல்லாம் சுற்றி இறுதியில் வீடு திரும்புவதை நகைச்சுவையாக கதைகளாக சொல்லியிருக்கிறார் நாவசாசிரியர்  கஃபூர் குல்யாம்.

இக்கதையை படிக்கும் பொழுது சிறுவயதில் நான் செய்த பல சேட்டைகள் மனதில் வந்து போனது. இப்படித்தான் ஒருமுறை வீட்டில், அப்பா உண்டியல் சேர்க்க தினமும் நாணயங்கள் கொடுப்பார். அதை நான் வாங்கி உண்டியலில் போட்டு சேர்த்து வைப்பேன். சில நாள் கழித்து அந்த உண்டியல் துளையியில் கம்மியை விட்டு போட்ட காசை யாருக்கும் தெரியாமல் எடுத்து காமிக்ஸ் புத்தகங்கள்  வாங்கிப் படிப்பது வழக்கம். ஒருமுறை அதை அப்பா கண்டுபிடித்துவிட்டார். விழப்போகும் அடிக்கு பயந்த என் கவலையை பார்த்து நண்பர்கள் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறிவிடு வெளியில் போல் வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் நாங்களும் வருகிறோம் என்று யோசனை கூற  கிளம்புவது என்று முடிவெடுத்து பின்பு தோல்வியில் போய் முடிந்தது. பிறகு முதுகு பழுத்தது வேறு கதை.

குறும்பன் கதை படிக்க நகைச்சுவையாய் இருந்தாலும் அந்த நகரம், அம்மக்கள், அவர்கள் உடைகள், உண்ட உணவுகள், சந்தை என அனைத்தையும் ஒன்றுவிடாமல் தெளிவாக நம் கண்முன்னே விவரிக்கிறார் ஆசிரியர். நான் இதுவரை  உஸ்பகிஸ்தானை கண்டதில்லை இப்புத்தகத்தை படித்தபின்பு அந்தக் காலத்தில் அந்நகரம் எப்படி இருந்திருக்கும் அந்நகர சந்தை எவ்வளவு பெரிதாக சிறப்பானதாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடிகிறது.


வாருங்களேன் உஸ்பகிஸ்தானின் சந்தைக்கு நானும் ஒருமுறை போய்வருவோம்!

No comments:

Post a Comment