தொடரும் தோழர்கள்

Sunday, February 18, 2018

பெண் ஏன் அடிமையானாள்

நூல்: பெண் ஏன் அடிமையானாள்
ஆசிரியர்: பெரியார்.
வெளியீடு: எதிர் வெளியீடு 
மொத்த பக்கங்கள்: 96

இது பெரியார் மண் அல்ல பெரியாழ்வார் மண் என்று முத்து உதிர்த்திருக்கும் தமிழக பா.ஜ.க வின் தலைவர் தமிழிசை அவர்களுக்கு இந்த நூலை பரிந்துரை செய்கிறேன்.

தமிழக வரலாற்றை பெரியாருக்கு முன்பு, பெரியாருக்குப் பின்பு என சமூக ஆராய்ச்சியாளர்கள் பிரிக்கின்றனர். அது சரியே! தமிழகம் இன்றைக்கு முன்னோடி மாநிலமாகத் திகழ்வதில் பெரியாரின் பங்கு இன்றியமையாதது. மதவாதக் கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாததற்கும் காரணம் பெரியார் எனும் ஒற்றை மனிதர் ஆற்றிய உரைகளும், எழுதிய எழுத்துக்களுமே ஆகும். தள்ளாத வயதிலும் ஊர் ஊராக அவர் மேற்கண்ட சுற்றுப்பயனங்கள், நிகழ்த்திய போராட்டங்கள், சட்ட இயக்ககங்கள் தான் எத்தனை.

பெண் விடுதலை ஆண்களின் போராட்டங்களால் நிச்சயம் நிகழாது என்று ஆணித்தரமாக பெரியார் நம்பினார். பெண்கள் தன் விடுதலையை தானே வென்றெடுக்க வேண்டும் என்று பெரியார் விரும்பினார். அதற்காக பெண் விடுதலை குறித்துகற்பு, வள்ளுவரும் கற்பும், காதல், கல்யாண விடுதலை, மறுமணம் தவறல்ல, விபச்சாரம், விதவைகள் நிலைமை, சொத்துரிமை, கர்ப்பத்தடை, பெண்கள் விடுதலைக்கு "ஆண்மை" அழிய வேண்டும்  ஆகிய தலைப்புகளில் அவர் எழுதிய கட்டுரைகளை தொகுத்து பெண் ஏன் அடிமையானாள் எனும் நூலை எதிர் வெளியீடு வெளியிட்டு இருக்கிறது.

தான் அடிமை வாழ்கை வாழ்வதை உணராத ஒருவன் எக்காலத்திலும் தன் அடிமை வாழ்விலிருந்து மீண்டு வெளியே வரமுடியாது. பெண்கள் தங்களின் இந்த நிலை சரியே என்று எண்ணி அதற்கு கற்பு, காதல், கல்யாணம் என்னும் பேர்களில் ஆண்களுக்கு அடிமைச் சேவகம் செய்வதை பெரியார் சாடுகிறார். ஆண்களால் தந்திரமாக அடிமை ஆக்கப்பட்ட பெண்கள் தன் நிலை உணர அதிலிருந்து மீண்டு வர அவசியம் அனைவருமே வாசிக்க வேண்டிய புத்தகம்.

தலைப்பு ஒவ்வொன்றும் வெடிகுண்டு, நம்காலத்தில் இவைகளைப் பற்றி எழுதியோ, பேசியோ இருந்தால் தமிழகமே பற்றி எறியும். ஆனால் பெரியார் அவர்கள் இவற்றை “பூனைகளிடமிருந்து எலிக்கு விடுதலை உண்டாகுமா” என் போலியாக பெண்ணியம் பேசும் ஆண்களை தன் தடி கொண்டு அனைவர் முதுகிலும் நாலு போடு போட்டு உணரவைத்திருக்கிறார். கருத்தடை குறித்து அவர் கூறிய கருத்து மத சடங்குகளை பற்றிக்கொண்டு இருப்பவர்களுக்கு சாட்டையடி.


இது பெரியார் மண்! அதை பெரியாரின் தடி என்றென்றும் எடுத்துச் சொல்லும். 

No comments:

Post a Comment