தொடரும் தோழர்கள்

Saturday, December 16, 2017

ருஷ்ய இலக்கியம் - பியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் "வெண்ணிற இரவுகள்"

வாழ்கையின் இருண்ட நாட்களில், தனிமையையே துணையாய் கொண்டு கடந்து கொண்டிருக்கும் ஒருவன், அவனைச் சுற்றி இருக்கும் அனைவரும், ஏன் அவன் வாழும் பீட்டர்ஸ்பர்க் நகரமே தன் நண்பர்கள் என பாவித்து ஒரு கற்பனை உலகை உருவாக்கி அதில் தன் நண்பர்களை உலவவிட்டு தன் தனிமையை வருத்தத்துடன் கடந்து செல்கையில், அவனது கருத்த இரவுகள் அவன்  சந்தித்த  ஒரு பெண்ணால் வெண்ணிற இரவாக மாறுவதே புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் "வெண்ணிற இரவுகள்" சிறுகதை. 

இச் சிறுகதையில் கதாநாயகனுக்கு பெயரேதும் இல்லை. நம் அருகில் நம்மையும் நண்பனாய் எண்ணி அமர்ந்து அவன் அனுபவித்த  இனிய காதல் நினைவுகளை  நம்மிடம் பகிர்ந்துகொள்கிறான் கதாநாயகன். மெல்லிய நீரோடை போல எந்த வித சலனமுமின்றி கதை பயணிக்கிறது. ஆனால் கதையை வாசிக்க வாசிக்க உள்ளுக்குள் இனம் புரியாத ஏதோ ஒரு உணர்வு நம்மை ஆட்கொள்ளத் துவங்குகிறது. இறுதியில் இரண்டு மூன்று நாட்களுக்கு நம் மனம் "நாஸ்தென்கா"வை சுற்றி சுற்றி வருவதை தடுக்க முடியவில்லை. 


"நாஸ்தென்கா" கதையின் நாயகி கருத்தமுடியுடையவள்  ருஷ்யாவின் மேல்தட்டு பெண்களுக்கே உண்டான பொலிவுடைய பெண்ணவள். அவளும் சீனத்து இளவரசன் வருவான், தன்னை மணந்துகொண்டு குதிரையில் கூட்டிச் செல்வான் என்று வேறொரு கற்பனைகிரகத்தில் வாழ்பவள். தன் பார்வையிழந்த பாட்டியின் அரவணைப்பில் வாழ்பவள். அவளோ தன் வீட்டு மாடியில் புதிதாய் குடிவந்த இளைஞனைக் காதலித்தாள். மாஸ்கோவிற்கு சென்ற அவன் ஒரு வருடத்தில் திரும்பிவருவதாய் உறுதியளித்துவிட்டு சென்றுவிட்டான்.


நாயகன் நாஸ்தென்காவை சந்தித்தது ஒரு இரவுவேளையில் நதிக்கரை ஓரத்தில், தனிமையில் அவள்  அழுதுகொண்டிருந்த போதுதான். அவளைப் பார்த்ததும் நம் கதாநாயகன் எப்படியாவது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு முதல் முறையாக பேசிவிடலாம் என்று எண்ணி அவளை நோக்கி நகர்கிறான். பின் அவள் அவனைப் பார்த்ததும் விலகிச் சென்றுவிடுகிறான். பிறகு ஒரு வில்லனின் தயவால் கதாநாயகனும் நாஸ்தென்காவும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டு தங்கள் கற்பனைக் கதைகளை பரிமாறிக் கொள்கின்றனர்.

தன்னை காதலிப்பதில்லை என்னும் உறுதியைப் பெற்றுக்கொண்டு 
நாஸ்தென்கா நாயகனை நண்பராக ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் நாஸ்தென்காவின் அன்பு நாயகனை காதலிக்கத்தூண்டுகிறது. நாஸ்தென்கா தன் காதலனைப்பற்றியும் ஒருவருட காத்திருப்பைப் பற்றியும் நாயகனுக்கு தெரியப்படுத்துகிறாள். நாயகனின் உதவி தனக்கு தேவை என்பதையும் எடுத்துரைக்கிறாள். தான் காதலிக்கும்  பெண்ணின் காதலுக்காக அவளுக்கு உதவி செய்ய சம்மதித்து உதவுகிறான். 

வராத காதலனுக்காக வருந்தும் நாஸ்தென்காவைப் பார்த்து வருத்தமுறும் நாயகன் ஒருநிலையில் தன்னால் இனி கட்டுப்படுத்தவே முடியாது என்று எண்ணி அவளிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறான். நாயகனின் உண்மைlயான அன்பும் பெண்ணை மதித்து பழகும் குணமும் நாயகனின் காதலை சம்மதிக்க வைக்கிறது. இருவரும் அதே நதிக்கரையில் தங்களது எதிர்காலத்தைப் பற்றி பேசிக்கொண்டு நடந்து செல்லும் வேளையில் அவர்கள் இருவரையும் ஒருவர் கடந்து செல்கிறார். நாஸ்தென்கா அவரை அடையாளம் கண்டுகொண்டு அழுதுகொண்டே அவனிடம் ஓடித் தாவி கட்டியனைத்துக் கொள்கிறாள். தான் விரும்பியவனுடன் சேர்வதே சரி என்று அவனுடனேயே செல்கிறாள். 

நின்காதல் நிழல்தன்னில் நின்று மகிழ்வோம்

மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதெனினும்

போதுமது என்றெண்ணிப் பிறந்தானோ?


இவான் துர்கனேவின் கவிதையுடன் துவங்குகிறது இந்த சிறுகதை.



4 comments:

  1. வருக இணையத்தமிழ் வளர்க்க வருக!
    எழுத்தாளனாய் வளர்க! உச்சிமோந்து வரவேற்கிறேன்.

    ReplyDelete
  2. ஒரிஜினல் படித்திருந்தால் கூட எனக்கு புரிந்திருக்குமா என சந்தேகமே! இப்போது கதையை நானே படித்த உணர்வு வருகிறது 👍👌

    ReplyDelete
  3. அருமை அண்ணா 👌

    ReplyDelete
    Replies
    1. படித்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி! 🙏🏾

      Delete